பரணி

நட்சத்திரம் - பரணி


பரணி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் ஆகும். இது ஒரு மங்கலான நட்சத்திரம். பரணி நட்சத்திரம் மூன்று நட்சத்திரங்களுடன் முக்கோண வடிவத்தில் காணப்படும்

வடமொழியில் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் பரணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

                       பரணி மும்மீன் அடுப்புப் போல,
                       திரண்மிகு கடகத்தொரு நாற்காலாம்

பொருள்: மூன்று நட்சத்திரங்கள் அடுப்பு போல அமைந்திருக்கும். இது உச்சத்திற்கு வரும் போது கடக ராசி உதித்து நான்கு நாழிகை ஆகியிருக்கும்.


  1. ஆளும் உறுப்புகள்: தலை, மூளை, கண் பகுதி

  2. பார்வை: கீழ்நோக்கு

  3. பாகை: 13.20 - 26.40

  4. தமிழ் மாதம: ் சித்திரை

  5. நிறம்: வெண்மை

  6. இருப்பிடம்: கிராமம்.

  7. கணம்: மனுஷ கணம்

  8. குணம: ் உக்கிரம்

  9. மிருகம: ் ஆண் யானை

  10. பறவை: காக்கை

  11. மரம்: பாலில்லாத நெல்லி

  12. மலர்: கருங்குவளை

  13. தமிழ் அர்த்தம்: தாங்கிப்பிடிப்பது

  14. தமிழ் பெயர் : அடுப்பு

  15. சராதி நட்சத்திரப்பிரிவுகள்: ஸ்திரம்

  16. நாடி: மத்திம நாடி, பித்தம்

  17. ஆகுதி: தேன், எள்

  18. பஞ்சபூதம்: பூமி

  19. நைவேத்யம்: வெல்ல அப்பம்

  20. தேவதை: சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தர்மதேவன் - எமன்.

  21. அதி தேவதை: துர்கையம்மன்

  22. அதிபதி: சுக்கிரன்

  23. நட்சத்திர தன்மைகள்: பெண் நட்சத்திரம், சவ்விய நட்சத்திரம்

  24. உருவம்: முக்கோண வடிவ நட்சத்திரக் கூட்டம்.

  25. மற்ற வடிவங்கள்: யோனி,அடுப்பு,முக்கோணம்

  26. மற்ற பெயர்கள்: அட்டுதல், சுதிதலம்,தாழி, தராசு, பூதம், சுங்கல், கிழவன், சேறு

  27. வழிபடவேண்டிய தலம்: தன்வந்திரி, ஸ்ரீ ரங்கம்

  28. அதிஷ்ட எண்கள்: 2, 6, 9.

  29. வணங்க வேண்டிய சித்தர்: ரிஷிபத்தன்யா

  30. பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் : லீ, லு, லே, லோ

  31. அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வெள்ளை

  32. அதிஷ்ட திசை: தென்கிழக்கு

  33. அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

  34. அணியவேண்டிய நவரத்தினம்: வைரம்

  35. அதிஷ்ட உலோகம் : வெள்ளி

  36. வெற்றி தரும் நட்சத்திரங்கள் : உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

  37. நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்: துரியோதனன், மகேந்திரவர்ம பல்லவன்.

  38. குலம்: நீச்ச குலம்

  39. புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்: ஆர்த்தம்

பொதுவான குணங்கள்

பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவர்களை கவர கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். நட்சத்திர மாலை எனும் நூலில், ‘தானங்கள் பலவுஞ் செய்வான்; தந்தை தாய்தனைப் பேணும்...’ என்று பரணி நட்சத்திரக்காரர்கள் குணத்தை குறிப்பிடுகிறது. தாயையும் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காப்பார்கள். மேலும் அதாவது தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும் ஆனால் சுயநலம் அதிகமாக இருக்கும். வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு, சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம், தோல்வியைத் தாங்கமுடியாத பயம், பாசமும் நேசமும் உள்ள பண்பு ஆகிய குணங்களை பெற்று இருப்பார்கள்.

அழகாக உடை உடுத்துவது, அணிகலன்களை அணிந்து கொள்வது மற்றவர்களின் பார்வை எப்பொழுதும் தான் மீது படும்படி நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். நடனம், பாட்டு, இசை இவற்றிலும் அதிக ஈடுபாடு இருக்கும்.

எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க கூடிய இயல்பு கொண்டவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கு போனாலும் சமயம் வரும்போது சரியாக காலை வாரி விடுவார்கள். சாதுவாக இருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பார்கள். புத்தகப் புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமுண்டு.


குடும்ப வாழ்க்கை

“பரணி, தரணி ஆளும்” என்ற பழமொழிக்கு ஏற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். வாழ்க்கை துணை, பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல பாதுகாப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதோடு சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது

குடும்பத்தை அதிகம் நேசிப்பார்கள். மேலும் அவர்கள் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க விரும்ப மாட்டார்கள் குடும்பத்தாரின் தேவைகளை தீர்ப்பதையே முக்கியமாக கருதி அதிக பணத்தை செலவழிப்பார்கள். வாழ்க்கை துணையிடம் இருந்து அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெற்று அழகான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

நண்பர்கள்

நண்பர்களை விட குடும்பத்தை அதிகம் நேசிப்பார்கள். சுற்றியிருப்பவர்களை எப்போதும் சிரிக்க வைப்பார்கள். உல்லாசப் பயணம் போவதென்றால் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மலை, அருவி, பூங்காவைப் பார்த்தால் அதனுடன் ஒன்றியும் போவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் ஆதாயம் தரக்கூடிய, ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களாக அமைவார்கள்.

மிருகசீரிடம், சித்திரை நட்சத்திர நண்பர்களால் லாபம் தரக்கூடிய நட்பு சாத்தியமாகும் என்பது உறுதி.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கை துணையாக வருவது மிகுந்த நன்மையைத் தரும். நட்பாக இருந்தாலும் மிக உத்தமமான பலன்களும் பலமும் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி,சதயம். இவர்கள் உங்களிடம் பழகுவதே உங்களிடம் ஆதாயம் பெறுவதற்காக மட்டுமே. ரோகிணி, அஸ்தம், திருவோணம். தவிர்ப்பதே நல்லது. பூசம், அனுஷம், உத்திரட்டாதி இந்த நட்சத்திரக்காரர்கள் நெருங்கிய உறவாக, வாழ்க்கைத் துணையாக இருந்துவிட்டால் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

தொழில்

பெரிய பதவியை எளிதாக அடைவார்கள். உங்களுக்குக் கீழே இருப்பவர்களை சாதுர்யமாக வேலை வாங்குவதுடன் சலுகைகளை வாரி வழங்குவார்கள். மூடக்கூடிய நிலையில் உள்ள நிறுவனமாக இருந்தாலும், பொறுப்புடன் போராடி அதனை நல்ல உயர்நிலைக்கு கொண்டு வருவார்கள். மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.

வயதான காலத்திலும் கௌரவப் பதவிகள், சமூகப் பொறுப்புகள் வரும்

தசா பலன்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை முதல் தசையாக வரும். மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சுக்கிர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சுக்கிர தசை:
பிறக்கும் போதே சுக்கிர தசை என்பதால் இளமை வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று அமைந்தோ இருந்தால் மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியில் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

சூரிய தசை:
இரண்டாவது தசையாக வரும் சூரிய தசை 6 வருட காலங்களில் சுமாரான நற்பலன்களைப் பெற முடியும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள்

சந்திர தசை:
மூன்றாவதாக வரும் சந்திர தசை 10 வருடம் நடைப் பெறும். இந்த தசையில் சற்று மனக்குழப்பம், ஜல தொடர்புடைய பாதிப்புகள் கொடுக்கும். சற்று சிரமப்பட்டு முன்னேற வேண்டியிருக்கும்.

செவ்வாய் தசை:
7 வருடங்கள் வரும் செவ்வாய் தசையில் பூமி மனை வாங்கும் யோகம் வாழ்க்கை துணை வழியில் அனுகூலம் உண்டு. இது மிகவும் நல்ல தசை என்றே கூறலாம்

ராகு தசை:
ராகு தசை 6வது தசையாக 18 வருடங்கள் நடைபெறும் ராகு தசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், செல்வம் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெற முடியும்.

குரு தசை:
ஆறாவது தசையாக வரும் குரு திசை. இதை பரணி நட்சத்திரகாரர்களுக்கு மாரக தசை ஆகும். ஆனால் குரு தசை காலங்களில் குரு முன்னேற்றத்தை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குரு சிறப்பாக இருந்தால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்ய கூடிய அமைப்பு தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.

மேற்கூறிய அனைத்து தசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பொது பரிகாரம்

பரணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் நெல்லி மரமாகும். நெல்லி மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பரணி நட்சத்திர நாளில் அதாவது பரணி நட்சத்திரத்தில் இசை, ஓவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்குதல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல், நடன அரங்கேற்றம் செய்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், மூலிகை செடிகளை பயிரிடுதல் மற்றும் ரோஜா உள்ளிட்ட முற் செடிகளை நடுவது போன்றவை மிகவும் நல்லது.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது அஸ்வனி நட்சத்திரத்திற்கு


பொருந்தும் நட்சத்திரங்கள்:

அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், மகம், சித்திரை 3, 4, விசாகம், மூலம், உத்திராடம், ரேவதி


பொருந்தா நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூசம், பூராடம் அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரஜ்ஜு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் கார்த்யாயின்யை ய வித்மஹே
சன்ய குமாரி தீமஹி
தள்நோ துர்கி பிரசோதயாத்



4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

பரணி1ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சூரியன்


பருத்த உடலுடன், நல்ல குணம் மற்றும் நல்ல செய்கையுடனும், நன்றியுடனும் இருப்பார்கள். எதிரிகளை சுலபமாக வெற்றி கொள்வார்கள். ஆனால் காம பிரியராகவும், அகங்கார குணத்துடனும் இருப்பார்கள்.

நவாம்ச அதிபதியாக சூரியன் இருப்பதால் ராஜ தந்திரம் அதிகம் இருக்கும். மேலும் தெரியாத விஷயமாக இருந்தாலும் அறிந்தவரை போல அதனுடைய சிறப்பை விளக்கி மற்றவர்களை நம்ப வைத்துவிடும் சாமர்த்தியம் இருக்கும்.

பரணி2ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி புதன்


நல்ல திறமைகள், மற்றவர்களை புரிந்து கொள்ளும் தன்மை, நல்ல பழகும் குணத்துடன் இயல்பாகவே தானம் தர்மம் செய்யும் குணத்தை பெற்று இருப்பார்கள். எதிரிகளை வெல்லும் ஆற்றல் பெற்று இருப்பார்கள். மேலும் மற்றவர்களால் புகழும், கீர்த்தியும் பெறுவார்கள்.

நவாம்ச அதிபதியாக புதன் இருப்பதால் எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவதுடன் புத்தி கூர்மையால் எந்த வேலையையும் செய்து முடிக்கும் வல்லமை பெற்று இருப்பார்கள். ஆனாலும் சோம்பலுடன் அதாவது சோம்பேறியாக இருப்பார்கள்.

பரணி3ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சுக்கிரன்


அதிஷ்ட தேவதைகளின் அருளினால் எக்காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். சந்தோஷங்களுடன் செளகர்யங்களுக்கு குறைவில்லாமலும் திடகாத்திர உடலுடனும், பெரிய கண்களுடனும் சிவந்த நிறத்துடனும் இருப்பார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகம் பணம் செலவழிப்பார்கள். 30 வயது வரை அதிகமாக செலவழித்து விட்டு, அதன் பிறகு சேமிக்கத் தொடங்குவீர்கள். 40 வயதுக்கு மேல் புகழ்பட வாழ்வார்கள். பெற்றோரை அதிகம் நேசிப்பார்கள்.

பரணி4ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சந்திரன்


பருத்த உடலுடனும் தோற்றத்துடனும், துன்மார்க்க குணத்துடனும், பிடிவாத சுபாவத்துடனும், வஞ்ச நெஞ்சம் பெற்றவராக இருப்பார்கள். அடிமை வாழ்க்கை அல்லது சாதாரண தொழில் அல்லது வேலை செய்பவராகவும் இருப்பார்கள் ஆனாலும் தன்னுடைய காரியங்களை சாதிக்கும் சாமர்த்தியம் இருக்கும்

அடுத்தவர்களின் வளர்ச்சியை அவர்களின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். வாழ்க்கை துணையிடம், பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்கள் செய்த உதவிக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் பதில் உதவி செய்யாவிட்டால் வருத்தப்படுவார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால், பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்துக்கும் நீதிமன்றத்தை நாடுவார்கள். எதற்கும் அஞ்சமாட்டார்கள். 37 வயதுக்கு மேல் நல்லது நடக்கும். சிறு வயதில் ஏற்பட்ட ஏமாற்றங்களால் முதுமையில் யாரையும் நம்ப மாட்டார்கள்.