காவேரியும் அகத்தியரும்



காவேரியை தென் திசையில் நடனமிட காரணம் அகத்தியர் தான் என்பது அனைவரும் அறிந்தே. ஆனால் அகத்தியரும் காவேரியும் பற்றிய பல கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றை பார்ப்போம்

கதை - 1

ஒரு முறை சுர்வதமன் என்ற அரக்கன் தன் கடும் தவத்தால் சிவபெருமானை மகிழ்வித்தான். தான் எல்லாவற்றிலும்  வெற்றி அடைய வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான் .

 

வரம் பெற்ற பின்னர் தன் கட்டுப்பாட்டுக்குள் உலகை கொண்டு வர வேண்டும் என்ற ஆசை அவனுக்கு வந்தது.  தேவலோகத்துக்கு சென்று அனைத்து தேவர்களை பிடித்து தன் சிறையில் அடைத்தான். ஆனால் சுர்வதமனிடம் சிக்காமல் இந்திரன் மற்றும் வருண பகவான் தப்பிச் சென்றுவிட்டனர். தென் திசையில் ஒளிந்து கொண்டனர்.

 

இந்திரனை சிறை பிடித்தே ஆக வேண்டும் என வேட்கை கொண்டிருந்த சுர்வதமன், வானில் பறந்து கொண்டிருந்த போது வருண பகவான் பிடித்தார்.  இந்திரனும் தென் திசை இருப்பதை உணர்ந்த அவன் வருண பகவானிடம் தென் திசையில் சொட்டு மழை கூட மொழியக் கூடாது என்று கட்டளை இட்டான். மழை இல்லாத காரணத்தால் இந்திரனை  தென் திசை மக்கள் தன்னிடம் ஒப்படைப்பார்கள் என்று நம்பினான். எனவே தென் திசை பாலைவனம் ஆனது.

 

தமிழை சிறப்பித்துக் கொண்டிருந்த அகத்தியர், மக்கள் படும் பாட்டை பொறுக்க முடியாமல், பிரம்ம தேவரை நோக்கி தவமிருந்தார். பிரம்மன் காட்சி அளித்த போது, தென் பகுதியை வளமாக்க வேண்டும் என வேண்டினார். ஆனால் பிரம்மாவோ, நீங்கள் சிவ பெருமானிடம் முறையிடுங்கள் அவர் உங்களுக்கு உதவுவார் என்றார்.

 

சிவனை வேண்டிய அகத்தியருக்கு, சிவபெருமான்  தன் தலையிலிருந்து செல்லும் கங்கையின் ஒரு பகுதியை அகத்தியருக்கு கொடுத்தார். அதை கமண்டலத்தில் அடைத்து தென் பகுதிக்கு வந்தார்.

 

தென் பகுதியை பார்க்க விரும்பிய கணேசன், மூஷிக வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தார். தென் பகுதியை அடைந்த அகத்தியர், சோர்வில் கமண்டலத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு வறண்டு போன இடங்களைப் பார்த்து சோகத்தில் அமர்ந்திருந்தார்.

 

அங்கு வந்த கணேசன், உடனடியாக தென் பகுதியை செழிப்பாக்க எண்ணி, காகமாக உருவெடுத்து, கமண்டலத்தில் உள்ள தண்ணீரைக் குடிக்க முயற்சிப்பது போல சென்று கீழே தள்ளினார்.

 

இதைப் பார்த்து அதிர்ந்த அகத்தியர், தான் அரும்பாடுபட்டு கொண்டு வந்த சிவபெருமான் வழங்கிய கங்கையை கொட்டி  விட்டது என நினைத்து காகத்திற்கு சாபம் வழங்கப் போவதாக கூறினார்.

 

அப்போது தன் சொந்த உருவத்திற்கு திரும்பிய கணேசனைப் பார்த்தவுடன் வணங்கினார். விநாயகர் “தென் பகுதி வறண்டு கிடப்பதை பார்க்க முடியவில்லை. அதை உடனடியாக செழுமையாக நினைத்ததால் தான் இப்படி செய்தேன். அங்கே பாருங்கள் ஆறு பொங்கி வருகிறது”  என்றார்.

 

அகத்தியர்  சாபம் இட தூக்கிய கைகளால் தலையில் குட்டிக் கொண்டார். மேலும் விநாயகர் வணங்க வருபவர்கள் தன் தலையில் கொட்டி கொண்டு அவர் அருள் பெறுவார்கள் என்று கூறினார்.

 

மேலும் விநாயகர் காகமாக மாறி நீரை விரித்தால் (பரப்பியதால்),காவேரி  என பெயர் பெறட்டும் என அகத்தியர் கூறினார் என்று புராண கதைகள் கூறுகின்றன .

 

கதை - 2

முனிவர் ஒருவரின் சாபத்தால் தெற்குப்பகுதி மிகவும் வறட்சியாகவும், மழையின்றி வறண்ட பூமியாகவும் மாறியது. இயற்கை உயிரோடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் அந்த பகுதியில் இல்லை. இவை அனைத்தையும் மலையின் உச்சியில் கரும்பாறையில்  இருந்த லோபமுத்ரா பார்த்து கொண்டுதான் இருந்தார்.

 

இன்னொரு புறத்தில் அரசர் காவேரன் குழந்தை இல்லாமல் தவித்து வந்தார். அதனால் பிரம்மகிரி மலைக்கு சென்று பிரம்மாவின் அருளை பெற காவேரன் சென்றார்

 

காவேரனின் பக்தியால் மகிழ்ந்த பிரம்மா அவர் எந்த அழகிய பொருளை தொழுகிறாரோ அது அவரின் குழந்தையாக மாறும் என்று வரம் வழங்கினார். பிரம்மாவின் வரத்தால் மகிழ்ந்த காவேரன் தன் அரண்மனைக்கு திரும்பினார். வரும் வழியில் கால் இடறி காவேரன் லோபமுத்ரா இருந்த பாறையை தாங்கிக்கொள்ள பிடித்துவிட்டார்.

 

அந்த பாறை அழகிய பெண்ணாக மாறியது. தனக்கு மகள் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த காவேரன் தன் மகளுக்கு காவேரி என்று பெயர் சூட்டினார்

 

அந்த குழந்தை 5 வயதில் ஸ்ரீ மகா விஷ்ணுவை குறித்து தவம் செய்ய விரும்பி  இன்று தலைக்காவேரி என்று சொல்லப்படும் இடத்தில் தவம் இருந்தது .

மகா விஷ்ணு இந்த குழந்தை முன் தோன்றி, இந்த விளையாடும் பருவத்தில் 5 வயதில் உள்ள குழந்தையான உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

 

அதற்குகாவேரி  குழந்தை என் பெயருக்கு உள்ள மகிமைகளை எனக்கு வரமாக வேண்டும் என கேட்டார். கா என்றால் பாவத்தை போக்குபவள். வே என்றால் விருப்பங்களை நிறைவேற்றுபவள். ரி என்றால் முக்தியை தருபவள். இந்த மகிமையை எனக்கு வரமாக வேண்டும் என கேட்டாள்.

 

மகா விஷ்ணு மிகவும் மனமகிழ்ந்து லோகத்திலேயே 5 வயதில் பரோபகாரமான சிந்தனையுடன் உள்ள காவேரிக்கு வரம் அளித்தார். மேலும் இதுவரை யாருமே கேட்டிராத வரத்தை நீ கேட்டதனால் இன்று முதல் உன்னுடைய பெயர் லோபா முத்ரா என்றும்,  தகுந்த நேரத்தில் ஸ்ரீ அகத்தியர்  உன்னை மணம் முடிப்பார். அவர் மூலம் உன்னுடைய வரங்கள் நிறைவேறும் என அருளினார்.

 

காவேரியை பற்றிய அனைத்து உண்மைகளையும் அகத்தியர், ஒருநாள் சப்தரிஷி அகத்தியர் காவேரயின் தந்தையை   அணுகி காவேரியை தனக்கு மணம் முடித்துக் கொடுக்கும்படி கேட்டார்.

 

தக்க நேரத்தில்  ஸ்ரீ அகத்திய பெருமான் லோபா முத்ராயை மணமுடித்தார். அவரிடம் தான் 5 வயதில் வரம் பெற்றது சொல்லினார் லோகமுத்திரை.  அகத்தியரும் லோபா முத்ராவும் (5 வயதில்) தவம் செய்த இடத்திற்கு சென்றார்கள். இருவரும் மகா விஷ்ணுவை தியானம் செய்யதர்கள்.

 

மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து அவர்களிடம்

 

நீ தவம் செய்த இடத்தில் நான் நெல்லி மரமாக மாறுவேன் என்றார் மேலும் லோபா முத்திரையான உன்னிலிருந்து ஒரு (அம்சம்) கூறு பிரிந்து நெல்லி மரமான என்னுடைய வேர் பாகத்திலிருந்து (பாதகமலம்) காவேரி எனும் புனித நதியாக வருவாய்”  என அருளினார்.

 

பிறகு மகாவிஷ்ணு நெல்லி மரமாக மாற, லோபா முத்ரா யின் ஒரு கூறு காவேரி நதியாக மாறியது. நதியான காவேரி தாய் அகத்திய முனிவரை வணங்கி புனித நதியான தனக்கு பூரணத்துவத்தை தரும்படி வேண்டினார்.

 

அனைத்து புனித நதிகள் உடைய பாவங்களையும் நீக்கும் ஆற்றலையும், விரும்பியவற்றை தரும் ஆற்றலையும், முக்தியை தரும் ஆற்றலையும் தரும்படி வேண்டினார். அகத்தியர் காவேரி நதியைக் கமண்டலத்தில் அடக்கி பூரணத்துவம் பெற தவத்தில் வைத்தார். நீண்ட நெடுங்காலமாக தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.

 

நாட்டில் புண்ணிய நதிகள் இல்லாமையால் பாவங்கள் பெருகி மழையின்றி வறுமையால் மக்கள் வாடினார்கள்.

 

காகத்தின் வடிவில் வந்த விநாயகர் சரியான இடத்தில் கமண்டலத்தை தள்ளிவிட்டு காவேரி  வெளியே வர காரணமாக இருந்தார் என்று என ஒரு கதையும் உண்டு. 

இதை தவிர மேலும் பல கதைகள் கூறப்படுகிறது.

 

அகத்தியரும் தொல்காப்பியரும்( தேரையர்):

 

அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் ஔவையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார்.  ஔவையுடன் வந்த சிறுவனைப்பற்றி விசாரித்தார் அகத்தியர். அதற்கு ஔவையார் இவன் பாவம் ஊமைப்பிள்ளை, பிராமணன் உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார். உடனே அச்சிறுவனை அகத்தியர் சீடனாக ஏற்றுக்கொண்டார்.

 

பாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன். ஆனால் கூன் முதுகு உடையவர். இதை ஜாடைமாடையாக மக்கள் விமரிசிப்பதைக் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம்  மூலிகை வைத்தியத்தால் அவனது சரி செய்வதாகக் கூறினார்.  சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார் .சீடன் மூலிகைகளைக் கொண்டுவந்தவுடன், அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார்.

 

அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் ஊமை சீடனை “அடுப்பைப் பார்த்துக்கொள்” என்று சாடை காட்டிவிட்டு சென்றார். மூலிகைச் சாறு நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது. சீடன் மிகவும் கவனமாக இருந்தார். கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல் கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்ந்தது. அது கண்ட சீடன் மூலிகைச் சாறு பதமாகிவிட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார் .அகத்தியர் திரும்பி வந்தார். மூலிகைச் சாறு இறக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு என்ன நடந்தது என்று வினவினார். சீடன் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததை சுட்டிக் காட்டினார். குறிப்பறிந்து செயல்பட்ட சீடனை  அகத்தியர் மனமாரபாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது.

 

காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதனை பொருக்கமுடியாத வேந்தன் அகத்தியரின் கால்களில் விழுந்து தன்னை குணப்படுத்துமாறு கதறினான். அகத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார்.  மன்னனின் தலைவலிக்கான காரணம் புரிந்தது.  அவர் மன்னிரிடம் “மன்னா! நீ தூங்கும்போது சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்துவிட்டது. அந்த தேரை மூளைக்குப் போய் தங்கிவிட்டது. அந்த தேரைதான் உன் தலைவலிக்குக் காரணம்” என்றார். மன்னன் திடுக்கிட்டான்.  அகத்தியர் "மன்னா கவலைப்படாதே தேரையை வெளியே எடுத்து உன் தலைவலியை தீர்க்கிறேன்" என்று தைரியம் கூறினார்.

 

சிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான்.  ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் தேரை உட்கார்ந்திருந்தது.  இதைக் கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார். குருநாதரின் திகைப்பைக் கண்ட சீடன் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து தேரையின் கண்களில் படுமாறு காண்பித்தான். தேரை தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தினுள் குதித்தது. உடனே அகத்தியர் சந்தானகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் கபாலத்தை மூடினார். சீடரைக் கட்டித்தழுவி பாராட்டினார். மன்னனின் தலைவலி தீர்ந்ததால் அவர் இருவரையும்பாராட்டினார்.  அந்த சிறுவன் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தேரையர் என்று அழைக்கப்பட்டார். அவருடைய ஊமைத்தன்மையைப் போக்கி  தமக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார்.

 

அவரின் உறுதுணையால் தேரையர்தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலை இயற்றி ‘தொல்காப்பியர்’ என்ற பெயரும் பெற்றார். ஒருமுறை சித்தர் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.  அவர் தனது நோயைத் தீர்த்துக்கொள்ள அகத்தியரின் உதவியை நாடினார். அகத்தியரும் அவருக்கு மருந்தை தந்து பத்தியத்தையும் கூறி அனுப்பினார். ஆனால் நோய் குணமாகவில்லை. அகத்தியர் தகவல் அறிந்து உடனே தேரையரை அழைத்து அவர் நோயைக் குணப்படுத்துமாறு அனுப்பினார். சித்தரைப் பரிசோதித்த தேரையர், ஒரு கொடுக்காய்க் குச்சியை எடுத்து நோயாளியின் வாயை திறந்து குச்சியை அதனுள் நுழைத்து அதன் ஓட்டை வழியாக மருந்தை செலுத்தினார். வயிற்று வலி உடனே தீர்ந்தது.

 

தேரையர் அகத்தியரிடம் சென்று செய்தியைக் கூறினார். தாம் கொடுத்த மருந்து பலம் இழந்ததற்கு காரணம் நோயாளியின் பல்லில் உள்ள விஷத்தன்மைதான் என்பதை உணர்ந்து தேரையர் குச்சி மூலம் மருந்தை செலுத்தியுள்ளார் என்பதை அகத்தியர் உணர்ந்துகொண்டார். தேரையரின் திறமையை வெளிப்படுத்த நினைத்த அகத்தியர் அவரை அருகில் அழைத்து "தேரையா! நீ உனக்கு விருப்பமான இடத்திற்கு போய் நல்லவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி செய்" என்றார். தேரையரும் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து அணனமயம் என்ற

காட்டுப்பகுதியில் தவம் செய்ய துவங்கினார்.

 

அங்கு தவம் செய்யும் முனி, ரிஷிகளின் பிணிகளைப் போக்கினார். ஒருநாள் அகத்தியர் தேரையரை அழைத்து “தேரையா, எனக்கு கண்வெடிச்சான் மூலிகை வேண்டும்” என்றார்.

 

கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் பறிபோய்விடும், யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டுவருகிறேன் என்று காட்டுக்குள் சென்றார். மூலிகையைக் கண்டார். ஆனால் அதனைப் பறிக்காமல் அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தேவியை தியானம் செய்தார்.

 

“கவலைப்படாதே தேரையா! மூலிகையை நான் பறித்துத் தருகிறேன்” என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண்வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு, அகத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்து, “நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ  தேறிவிட்டாய். நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது” என்றார்.  குருவின் கட்டளைப்படி அவரின் ஆசிகளுடன் ‘தேரையர் குலைபாடம்’ என்ற நூலை இயற்றினார்.

 

நெடுங்காலம் மருத்துவ சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதியடைந்தார்.

 

ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலங்கள்

 

குற்றாலத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த இலஞ்சி குமாரர் கோவில் அகத்தியர் வழிபாட்டு தலம் ஆகும்.

 

திருவிலஞ்சி என்னும் இத்திருத்தலத்தில் சித்ரா நதி தீர்த்தத்தில் கபிலர், காசிபர், துருவாசர் ஆகிய மும் முனிவர்கள் வேண்டிக்கொண்ட அதற்கிணங்க இத்தலத்தில் ‘இலஞ்சி குமாரர்” ஆக ’ முருகப்பெருமான் வள்ளி, தேச சேனா சமேதராக எழுந்தருளி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் பார்வதி – பரமேஸ்வரரின் திருமணம் காண யாவரும் இமயம் சென்ற போது பாரப்பழுவினால் வடதிசை தாழ,தென்திசை உயர்ந்த பொழுது, இதனை சமப்படுத்த சிவபெருமானின் ஆணையை ஏற்றுக் கொண்டு தென்பகுதி வந்த குறுமுனி ஆகிய அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘வெண்மணலான சிவலிங்கம்’ இத்திருக்கோயிலில் உள்ளது.

 

குற்றால வைணவ தலம் சிவஸ்தலமாக மாற்றிய பெருமை யுடையவர் அகத்தியர்.  உலகை சமநிலை படுத்த தென் திசை வந்த  பொதிகை மலையின் குற்றாலத்திற்கு வந்தார். அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவ திருக்கோயிலாக இருந்தால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அவர் சித்ரா நதி தீர்த்திற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். தேவநாகரியில் வெண்மணல் ”இருவாலுகம்” என்று அழைக்கப்படுவதால் இத்தலத்து சிவனுக்கு “இருவாலுக ஈசர்” என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே என எண்ணிய அகத்தியர் முருகப்பெருமானை வேண்டினார், முருகப்பெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல். அங்கு சென்று அங்குள்ள திருமாலைக் குறுக்கி குற்றாலநாதர் ஆக்கு” எனப் பணித்தார், அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றினார்.

 

இத்திருக்கோயில் இருவாலுக ஈசர் என்றும் இருவாலுக ஈசர்க்கினியாள் என்றும் சிவத்தலமாக இருந்த போதிலும் திரு இலஞ்சி குமாரர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அம்மை அப்பருடன் எழுந்தருளி உள்ளதால் இங்கு திருமணம் செய்வது விசேஷம். ஆகவே இங்கு அதிக அளவில் திருமணம் நடப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். இலஞ்சி என்ற சொல்லுக்கு மகிழம் என்ற பொருள் உண்டு.

இது தான் இந்தக் கோயிலின் புராண சிறப்பு ஆகும்.